சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.49 திருமுருகன்பூண்டி
பண் - பழம்பஞ்சுரம்
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
    விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
    டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
    பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
1
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
    விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
    கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
    பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
2
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
    பாவ மொன் றறியார்
(*)உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
    கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
    பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

(*) உயிர் - உசிர் என மருவியது.
3
பீறல் கூறை உடுத்தோர் பத்திரங்
    கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
    கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
    பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
4
தயங்கு தோலை உடுத்த சங்கரா
    சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
    மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
    பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
5
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
    கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
    குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
    பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
6
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
    கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
    முத்தி நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
    பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல்கொண்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
    தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
    பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
    பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
8
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
    பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
    பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
    பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
    எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
9
முந்தி வானவர் தாந்தொழு முருகன்
    பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
    பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
    உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
    ஒன்றுந் தாமி லரே.
10
(*) சேரமான்பெருமான் நாயனார் கொடுத்த பரிசுகளை தலையில் எடுத்துக் கொண்டு திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமேஸ்வரனின் கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகி வந்து அப்பரிசுகளைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com